துறைமுக நகரத் திட்டத்தில் ஊழல் இடம்பெறவில்லை – சிறிலங்கா அரசு
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, சிறிலங்காவின் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்றும், பொருத்தமான நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளனவா என்பதே, கரிசனைக்குரிய விவகாரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் முதலீட்டிலான திட்டம் துவங்கப்பட முன்னதாக, முன்னைய அரசாங்கத்தினால் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தினால் இந்த திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.