சிறிலங்கா அதிபர் நாளை நாட்டு மக்களுக்கு முக்கிய உரை – நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் மிக முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலகம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், நாளை அவரது உரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 23ம் நாள்( நாளை) நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதாக, அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.
எனினும், 19வது திருத்தச்சட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில்- முக்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில்- சிறிலங்கா அதிபரின் உரை இடம்பெறவுள்ளது.
அவர் தனது உரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது 100 நாள் செயற்திட்டத்தின் சாதனைகள் குறித்தும், இயலாமை குறித்தும் நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ளது.