விசாரணைக்குழுவை அனுப்புவது குறித்து உக்ரேனியத் தூதுவருடன் மங்கள பேச்சு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, புதுடெல்லியில் உள்ள உக்ரேனியத் தூதுவர் ஒலெக்சான்டர் செவ்சென்கோ நேற்று கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்றுமாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ரஸ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவரான உதயங்க வீரதுங்க, உக்ரேனிய போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக உக்ரேனிய அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உதயங்க வீரதுங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அடுத்த மாதம், சிறிலங்காவின் உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றை உக்ரேனுக்கு அனுப்புவது தொடர்பாக, இந்தப் பேச்சுக்களின் போது, ஆராயப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கே, புதுடெல்லியில் உள்ள உக்ரேனியத் தூதுவரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கொழும்புக்கு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.