சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரேணை கொண்டு வர முயற்சி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு சிறிலங்கா நாடாளுமன்றத்தில், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்து திரட்டும் பணி முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைப்பதை தடுப்பதே இந்தக் குற்றப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதன் நோக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டால், அதனை சபாநாயகர் தட்டிக்கழிக்க முடியாது என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே, நேற்றிரவு நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முன்னார் பிரதம நீதியரசர் மொகான் பீரிசின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
19வது திருத்தச்சட்டம் நிறைவேறுவதை தடுப்பதற்கு அவரது ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.