மேலும்

இன்றைய சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

sampanthan-trinco-meet (1)அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இன்று இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் அனைத்துலக சமூகத்துக்கு முன்னால் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அங்கு ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அதன் நிமித்தம் அனைத்துலக விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் வெளிவந்திருக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு, தான் ஐ.நா.வுடனும் மனித உரிமைகள் பேரவையுடனும் ஒத்துழைக்கத் தயார் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அந்த விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

sampanthan-trinco-meet (2)

sampanthan-trinco-meet (3)

sampanthan-trinco-meet (4)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தவரை, உண்மைகள் அறியப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நடைபெற்ற வேண்டத்தகாத சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்பது அவர்களின் உறுதியான நிலைப்பாடு.

சிறப்பு அறிக்கையாளர்கள் கூட சமீபத்தில் சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்தார்கள்.

எனவே இவற்றை ஒட்டு மொத்தமாக அவதானிக்கின்ற போது எமக்கொரு நல்லதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

புதிய தேர்தல் முறை தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அது சம்பந்தமாக தீர்க்கமான முடிவு அரசாங்கத்தினால் இன்னும் எடுக்கப்படவில்லை.

அரசாங்கம் புதிய தேர்தல் முறை சம்பந்தமாக ஒரு முடிவை எடுக்கும் போது அந்த முடிவின் அடிப்படையில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் நாம் பங்கு கொள்வோம்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அதிபரால் ஒரு செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் செயலணியை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் சென்றவாரம் சந்தித்து உரையாடினோம்.

நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சம்பந்தமாக உண்மைகள் அறிந்து – நீதி வழங்கி, அதன் மூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் – நல்லிணக்கம் ஏற்பட்ட பின்பு மீண்டும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறினோம்.

அதற்காக சில திட்டங்களை வகுத்து அதன்படி செயற்பட அரசாங்கம் தயாராகி வருகிறது. இது இன்றைய நிலை.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி பிரிவிலும் இதுவரை காலமும் காணி அபகரிப்புக்கள், தொழில்சார் விடயங்கள், புனர்வாழ்வு, கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், காணாமல் போனவர்கள், விதவைகள், வாழ்வாதாரம் சம்பந்தமாக அனைத்து தரவுகளையும் உண்மை நிலைமைகளையும் சேகரித்து அதிபர் செயலணிக்கு சமர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது.

கலாசார மையங்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என்பன கடந்த காலங்களில் அழிக்கப்பட்டுள்ளன. இவை சம்பந்தமாக போதிய விவரங்களையும் தரவுகளையும் சேகரித்து அதிபர் ஆணைக்குழுவுக்கு சமர்பிப்பதன் மூலம் நல்லதொரு தீர்வை இவற்றுக்கு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகி இருக்கின்றது.

அதை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்திருக்கிறது”  எனத் தெரிவித்தார்.

படங்கள்- எஸ்.எஸ்.குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *