சிறிலங்கா நிதிஅமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- மகிந்த வீட்டில் தீர்மானம்
சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் நேற்று நடந்த ஒன்றுகூடலிலேயே இதுகுறித்து தீர்மானிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்..
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று இறுதி செய்யப்பட்டு, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையெழுத்திட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் வாசு தேவ நாணயக்கார கூறினார்.
திறைசேரி உண்டியல் மூலம் நிதி திரட்டுவதற்கு அனுமதி கோரிய பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், நிதியமைச்சர் பதவி விலக்கப்பட வேண்டும் என்று கோரியே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னால் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவே இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.