சுசிலிடம் பந்தை வீசினார் சபாநாயகர் – சம்பந்தனுக்கு வாய்ப்புக் குறைவு
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, அந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரின் பெயரைத் தருமாறு கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச, இது ஒரு உட்கட்சி பிரச்சினை என்று தனக்குத் தெரிவாகத் தெரிவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரின் பெயரைத் தருமாறு, அக்கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் கோருவதாகவும், அதன் பின்னர், தாம் முடிவெடுப்பதாகவும் அறிவித்தார்.
சிறிலங்கா சபாநாயகரின் இந்த அறிவிப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஒருவரையே, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க உத்தேசித்திருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.