புதிய ஆட்சியில் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை உருவாக்கத் தவறிவிட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட, அவுஸ்ரேலியத் தூதுவர் ரொபின் மூடி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன் போதே அவர் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் குறித்த இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய கள நிலைமைகள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட, ஆனால் நடைபெறாமல் போன விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் மாற்றம் மக்கள் மத்தியில் எத்தகைய முன்னேற்றங்களை மற்றும் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவுஸ்ரேலியத் தூதுவர் வினவியதாகவும், அதற்குத் தான், நாங்கள் எதிர்பார்த்த எதையும், ஆட்சிமாற்றம் கொடுக்கவில்லை என்று தான் பதிலளித்ததாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.