பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா அதிபர் முக்கிய பேச்சு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப்புடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பாகிஸ்தான் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தச் சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர், தாரிக் பதேமியும் கலந்து கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, சோதனைமிக்க தருணங்களில், ஒருவர் மற்றவருக்கு ஆற்றிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு பரஸ்பரம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
தீவிரவாதப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் அளித்த ஒத்துழைப்புக்கு, சிறிலங்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு வர்த்தகம், பயிற்சி, மற்றும் ஏனைய உதவிகளைத் தொடர்ந்து பாகிஸ்தானிடம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், சிறிலங்காவின் ஆயுதப்படைகளைச் சேர்ந்த 4000 பேருக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்திருப்பதாகவும், சிறிலங்காவுடன் இந்த துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பை பரிமாறிக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ்சும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.