மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் ஆந்திராவில் சுட்டுக்கொலை
இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
திருப்பதியில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில், ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் இன்றுகாலை நடந்த இந்த சம்பவத்தில், 20 பேர் ஆந்திர மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்களே, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் சேசாசலம் வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை, காவல்துறையினர் சுற்றி வளைத்ததாக ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி கன்டா ராவ் தெரிவித்தார்.
அவர்கள் ஆயுதங்களுடன் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்ததாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 பேர் பலியானதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 20 பேரில், 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.