அம்பாறையில் காணாமற்போனோர் குறித்த விசாரணை – புறக்கணிக்க சிவில் அமைப்புகள் அழைப்பு
காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று அம்பாறையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விசாரணைகளைப் புறக்கணிக்குமாறு, மாவட்ட சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிபர் ஆணைக்குழு, இன்று தொடக்கம் எதிர்வரும் 9ம் நாள் வரையான நான்கு நாட்கள் அம்பாறை மாவட்டத்தில் அமர்வுகளை மேற்கொள்ளவுள்ளன.
கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ள இந்த அமர்வுகளில் பங்கேற்க, 330 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலர் எச்.எம்.குணதாச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ள அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புகள், இன்று ஆரம்பமாகவுள்ள விசாரணை அமர்வுகளை புறக்கணிக்குமாறு கோரியுள்ளன.
தமக்கு உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அம்பாறை சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழுவின் அமர்வுகள், வடக்கு கிழக்கில் ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முதல் முறையாக இப்போது தான் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.