போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் புனர்வாழ்வுக்கு கிளிநொச்சியில் தேசிய நலன்புரி நிலையம்
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கான தேசிய நலன்புரி நிலையம் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் புனர்வாழ்வுக்காகவே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மக்களின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
”போரினால், பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நன்கு தெரிந்த உண்மை.
வடக்கில் மட்டும், சுமார் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.
இவர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சிரமப்படுகின்றனர்.
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் குறித்த ஐ.நா அறிக்கை ஒன்றின் அடிப்படையில், இந்தக் குடும்பங்களின் சமூக, பொருளதார வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வழிவகைகைள கண்டறிய சிறிலங்கா பிரதமர் குழுவொன்றை நியமித்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே இந்த நலன்புரி நிலையம் அமையவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் நேற்று அறிவித்துள்ளது.