பாகிஸ்தானுடனும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செய்கிறது சிறிலங்கா?
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பாகிஸ்தான் சென்றடையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பல புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.
இன்று இஸ்லாமாபாத்தை சென்றடையும், சிறிலங்கா அதிபர், நாளை, பாகிஸ்தான் அதிபர் மாமூன் ஹுசேன், பிரதமர் நவாஸ் ஷரீப் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தப் பேச்சுகளின் பின்னர், புரிந்துணர்வு உடன்பாடுகளும், ஒத்துழைப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளதாக, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்பாடுகளில், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
அதேவேளை, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இறுக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டிருந்த பாகிஸ்தான், தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போருக்குத் தேவையான ஆயுத தளபாடங்களை கொடுத்து உதவியிருந்தது என்று பாகிஸ்தானின் டோன் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
போரின் போது இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிராந்திய சக்திகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறிலங்கா தங்கியிருந்த்து என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.