மே 05ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு, ஜூன் 27இல் தேர்தல்?- ஆங்கில வாரஇதழ் தகவல்
சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் மேமாதம் 05ம் நாள் கலைக்கப்பட்டு ஜூன் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
100 நாள் செயற்திட்டத்தின் முடிவில், வரும் ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தான் தயார் என்று சிறிலங்கா அதிபரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 19வது அரசியலமைப்புத் திருத்த யோசனைகளைக் கருத்தில் கொண்டு, மேதினத்துக்கு பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆலோசனை கூறியுள்ளார்.
எனினும், மே 03, 04ம் நாள்களில் கொண்டாடப்படவுள்ள வெசாக் பண்டிகைக்குப் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்க ரணில் ஆலோசனை கூறியுள்ளார்.
எனவே, மே 05ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் நாள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூன் மாத இறுதி சனிக்கிழமையான ஜூன் 27ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனினும், பல்வேறு அரசியல் சூழ்நிலை மாற்றங்களால் இதில் சில மாற்றங்கள் இடம்பெறக் கூடும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது.