மேலும்

வடக்கு மாகாணசபையுடன் முரண்படத் தயாரில்லை – என்கிறார் மைத்திரி

MS_CMவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனோ அல்லது வட மாகாணசபையுடனோ எவ்விதத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் சிறிலங்கா தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் வடக்கு மாகாணசபையானது மத்திய அரசாங்கம் தொடர்பாகக் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக  எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன-

“வடக்கு மாகாணசபை முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மிகவும் நல்லவர். அவரை எனக்குத் தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரியும்.

கொழும்பில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர். அவருக்கு இந்நாட்டிலுள்ள சகல விதமான சட்டவரையறைகள் பற்றியும் நன்கு தெரியும்.

எனவே அவர் வடக்கு மாகாணசபையின் தலைமைப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராகக் காணப்படுகிறார்.

அவருடனோ அல்லது வடக்கு மாகாணசபையுடனோ எந்தவிதமான முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை.

அவருடன் கலந்துரையாடி வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் அங்கே சில நிர்வாக முறைகேடுகள் இருந்தமை உண்மையாக இருக்கலாம்.

அவற்றை இனியும் தொடரவிடாது மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தி மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் செற்பாடுகளை வரையறுத்து செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

மத்திய அரசும் மாகாண அரசும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுவதனால் இரு தரப்புக்குமே பாதிப்பு, அதனால் மக்களும் பாதிப்படைவர்.

எனவே பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு மூலமாக அடுத்தகட்ட நகர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

இது புதிய அரசாங்கம். எம்மிடம் புதிய கொள்கைகள் உள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *