26 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
சிறிலங்காவில் மேலும் 26 அமைச்சர்கள் இன்று புதிதாகப் பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.
இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகிழ்வில், அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் 11 பேரும், 5 இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக இவர்கள் பதவியேற்றுள்ளனர்.
இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டவர்களை அனைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாவர்.
அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாக, ஏ.எச்.எம்.பௌசி, எஸ்.பி.நாவின்ன, பியசென கமகே, கலாநிதி சரத் அமுனுகம, எஸ்.பி.திசநாயக்க, ஜனக பண்டார தென்னக்கோன், பீலிக்ஸ் பெரேரா, மகிந்த யாப்பா அபேவர்த்தன, ரெஜினோல்ட் குரே, விஜித் விஜயமுனி சொய்சா, மகிந்த அமரவீர ஆகியோர் பதவியேற்றனர்.
புதிய இராஜாங்க அமைச்சர்களாக, பவித்ரா வன்னியாராச்சி, ஜீவன் குமாரதுங்க, மகிந்த சமரசிங்க, சி.பி.ரத்நாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதியமைச்சர்களாக, திஸ்ஸ கரலியத்த, தயாசிசித திசேரா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, லக்ஸ்மன் செனிவிரத்ன, லலித் திசநாயக்க, ஜெகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன, சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, சாந்த பண்டார ஆகியோர் பதவியேற்றனர்.
எனினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களான, நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம ஜெயந்த, டி.எம்.ஜெயரத்ன, ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.