இன்று உதயமாகிறது தேசிய அரசாங்கம் – 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடத்தப்பட்ட இரகசியப் பேச்சுக்களை அடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று பிற்பகல், சுதந்திரக் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
இவர்களில் 15 பேர் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், 15 பேர் பிரதி அமைச்சர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
எனினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பொறுப்புகளை வகிக்கும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாகப் பதவியேற்கமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில், நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் விதிவிலக்காக இருப்பார்கள்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்றபின் பின்னர், 29 பேர் கொண்ட அமைச்சரவை, 44 பேர் கொண்டதாகவும், 13 பிரதியமைச்சர்கள், அமைச்சர்களின் எண்ணிக்கை, மேலும் 15 இனாலும் அதிகரிக்கவுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவினால் அளிக்கப்பட்ட தேசிய அரசாங்கம் குறித்த வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும்.
அதேவேளை, தற்போதுள்ள 9 இராஜாங்க அமைச்சர்களுடன், மேலும் 10 சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர். இதுதொடர்பாக இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.