ராஜபக்ச பதுக்கியுள்ள 2 பில்லியன் டொலரை கண்டுபிடிக்க இந்தியாவும், அமெரிக்காவும் உதவி
டுபாயில் உள்ள வங்கியில் ராஜபக்ச குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்டுள்ள 2 பில்லியன் டொலர் பணம் தொடர்பான விசாரணைக்கு, இந்தியாவும் அமெரிக்காவும் உதவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டுபாயில் உள்ள வங்கியொன்றில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் 1.064 பில்லியன் டொலரும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு இருவரின் பெயரில் 500 மில்லியன் டொலரும், மேலும் இருவரது பெயரில் 500 மில்லியன் டொலரும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பணத்தைக் கண்டுபிடிப்பதற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது.
இதையடுத்து, ராஜபக்ச குடும்பத்தினரால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தைக் கண்டுபிடிப்பதற்கு, புதுடெல்லியும், வொசிங்டனும் உதவி வருவதாக, இந்திய அதிகாரிகள் தெரிவித்ததாக, எக்கனொமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள மொத்தப் பணத்தின் 20 வீதமே டுபாய் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக, தற்போதைய அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
எனினும், அண்மையில் புதுடெல்லிக்குச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சென்.மார்ட்டின் தீவு, ஹொங்கொங், மக்காவு, சீசெல்ஸ் ஆகிய இடங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள, டுபாய், உகண்டா, கென்யா போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் துறையில் ராஜபக்ச குடும்பத்தினரால் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தைக் கண்டறிய உதவுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.