பீல்ட் மார்ஷல் பதவிநிலை சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்தைச் சூனியமாக்குமா?
பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அரசியலில் தொடர்ந்து ஈடுபடும் வாய்ப்பை இழப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில் முதல்முறையாக இந்தப் பதவிநிலை உருவாக்கப்படவுள்ளது.
இது, அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவருக்கு இணையான பதவியாக இருக்கும், இராணுவத்தில் வாழ்நாள் சலுகைகளை அனுபவிக்கும் வசதி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்படும் ஒருவர், அரசியலில் ஈடுபட முடியாது என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி பிரதிப மகாநாமஹேவ தெரிவித்துள்ளார்.
எனினும், சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதற்குத் தடை இருக்காது என்றே அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
பீல்ட் மார்ஷல் பதவிநிலை குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே, சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலம் குறித்து உறுதியாகத் தெரியவரும்.