19வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல்- சிறிலங்கா அதிபர்
19வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளை இன்று காலை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அனைத்துக் கட்சிகளும் இடம்பெறும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குச் சாதகமான வகையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
19வது அரசியலமைப்புத் திருத்த யோசனை அடுத்தவாரம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலின் போது, நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பதவி ஒழிக்கப்படும் என்றும், பிரதமருக்கு அதிகாரம் அளிக்கப்படும் வகையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும் என்றும் மைத்திரிபால சிறிசென வாக்குறுதி அளித்திருந்தார்.
எனினும், நேற்று முன்தினம் நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்ட யோசனை, நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கும் பதிலாக, அந்தப் பதவியின் அதிகாரங்களைக் குறைக்கவு வழ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.