மேலும்

அமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு

Sarath-Fonsekaஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை வரும் 22 ஆம் நாள் முதல் மீண்டும், சேவையில் இணைத்துக் கொண்டு, அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அனுமதியை வழங்கியுள்ளார்.

நாடு இரண்டாக பிளவுபடுவதை தடுத்து, நாட்டைப் பாதுகாப்பதற்கு தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா, மூன்று முறை தாக்குதலுக்கு உள்ளான போதும், நாட்டை காக்க அர்ப்பணிப்புக்களை செய்தவர் என்ற வகையில், சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

  • பீல்ட் மார்ஷல் பதவி, ஐந்து நட்சத்திர ஜெனரல் பதவிக்கு நிகரானது.
  • இந்தப் பதவியை வகிப்பவர் இராணுவ சேவையில் ஒய்வுபெறாது – நிரந்தரமாகச் சேவையில் இருப்பார்.
  • கௌரவ பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக செயற்பாடுகளில் தலையிடுபவராக இருக்கமாட்டார்.
  • பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்தின் கீழ் பணியாற்றுபவர் அல்ல.
  • பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களும் கொண்டிருக்கும் உரிமைகளைக் கொண்டிருப்பார்.
  • ஜனநாயக ரீதியில் அரசியலில் ஈடுபடும் சுதந்திரமும் அவருக்கு இருக்கும்.
  • அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்குள்ள அந்தஸ்தை அவர் கொண்டிருப்பார்.
  • பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெறும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 4 அதிகாரிகள் அடங்கலாக, 150 படையினரின் பாதுகாப்பு அளிக்கப்படும்.
  • வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சம்பளம் வழங்கப்படும்.
  • வாழ்நாள் முழுவதற்கும் அவருக்கான பணியகமும், அதற்கான பணியாளர்களும் வழங்கப்படும்.
  • பீல்ட் மார்ஷல் ஒருவர் உயிரிழந்தால், இராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்படுவதுடன் 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்படும்.
  • அதிகாரபூர்வ வதிவிடம், இராணுவ உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்து வசதிகள் என்பனவும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்.
  • பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவும் அதிகாரபூர்வ வதிவிடமும் வழங்கப்படும்.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படுவது போல, கடற்படைக்குத் தலைமை தாங்கிய, தனக்கும், அவருக்கு இணையான பதவி வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இராணுவத்தில் உள்ள ஐந்து நட்சத்திர பீல்ட் மார்ஷல் பதவிக்கு நிகரான, கடற்படைப் பதவியான அட்மிரல் ஒவ் பிளீட் (Admiral of the fleet) என்ற பதவி உயர்வே தனக்குத் தரப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *