கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதாக சீன நிறுவனம் அறிவிப்பு
கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்துவதாக அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தும், சிறிலங்கா அமைச்சரவை முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி, தமக்கு துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த திட்டத்தை ஆரம்பிக்க முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட முன் அனுமதிகளை சமர்ப்பிக்குமாறும் சிறலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாகவும், சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான எல்லா ஆவணங்களும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் சீன நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர கட்டுமானப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தும் முடிவு, சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்னரும், நிர்மாணப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.