மேலும்

அபிலாசைகளை நிறைவேற்றும் உரிமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும் – சுஸ்மாவிடம் சம்பந்தன்

sam-sushmaதமிழ்மக்களின் பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது, இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழரைத் தாயகம் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்று, சுஸ்மா சுவராஜிடம், கேட்டுக் கொண்டதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாகவும், தாம் பேச்சு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அபிலாசைகளை நிறைவேற்றும் உரிமை தமிழ்மக்களுக்கு  இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவாக எடுத்துக் கூறியதாகவும் இரா. சம்ப்நதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *