சீனாவின் 5 பில்லியன் டொலர் கடன்கள் குறித்து பேச பீஜிங் செல்கிறார் சிறிலங்கா நிதியமைச்சர்
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பீஜிங் செல்லவுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
1.5 பில்லியன் டொலர் செலவிலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட முன்னைய ஆட்சிக்காலத்தில், அபிவிருத்தித் திட்டங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் குறித்து மீளாய்வு செய்யப் போவதாக மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதனால், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 5 பில்லியன் டொலர் கடன் திட்டங்களின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது.
இதுகுறித்து பீஜிங்கில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
“சீனாவிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்கள் திரட்டப்பட்ட முறை குறித்து சிறிலங்காவில் கவலைகள் எழுந்துள்ளன.
அதிபர் தேர்தல் பரப்புரையின் போது, சிறிலங்கா மக்கள் குறிப்பாக கடன்களுக்கான வட்டி வீதங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
சில குறிப்பிட்ட விடயங்களில் இந்தக் கடன்கள் பெறப்பட்டமுறை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
எனவே ஒரு அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிப்போம். ஒவ்வொரு விடயங்களிலும் இதனை செய்ய வேண்டும்.
சீனாவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் மார்ச் 26ம் நாள் முதல் 28ம் நாள் வரை மேற்கொள்ளவுள்ள பயணத்தைத் தொடர்ந்து, சிறிலங்காவின் நிதியமைச்சர் பீஜிங்கிற்கு பயணம் மேற்கொள்வார்.
அவர், கடன்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.