இந்திய வரவு செலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு
இந்தியாவின் 2015/16ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்காவுக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று 2015/16ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 19 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக, வெளிநாடுகளில் பொருளாதார , தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு 9107 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில், இதற்கென 7234.26 கோடி ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் 61 வீதம், வெளிநாடுகளுக்கான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பூட்டானுக்கு, 6160.20 கோடி ரூபாவும், ஆப்கானிஸ்தானுக்கு, 676 கோடி ரூபாவும், சிறிலங்காவுக்கு 500 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு 183 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.