துறைமுக நகரத் திட்டத்தினால் சீனாவுடனான உறவை முறிக்க முடியாது – நாடாளுமன்றில் ரணில்
1.5 பில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மாணிக்க சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, அமைச்சரவை அனுமதியின்றி, சட்ட நடைமுறைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பா அவர், நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
துறைமுக நகரத் திட்டம் தொடர்பான எல்லா உடன்பாடுகளும், வெளிப்படைத்தன்மையின்றி, பல சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியைப் பெறாமலேயே உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
முன்னைய அரசாங்கம், சரியான தகவல்களை வழங்காமல், நாடாளுமன்றத்தை முன்னைய அரசாங்கம் தவறாக வழிநடத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் ஏதேனும் ஊழல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து ஆராய வர்த்தக முகாமைத்துவ நிபணர் அஜித் டி கோஸ்தா தலைமையில் சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன். அமைச்சரவை உப குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு மாறான ஏதேனும் வகையில் உடன்பாடு கையெழுத்திடப்பட்டிருந்தாலோ, ஏதேனும், ஊழல் இடம்பெற்றிருந்தாலோ, ஏதுனும் நிபந்தனைகளால் நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றாலோ, நாம் தேவையான நடவடிக்கை எடுப்போம்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இருந்ததை விட சீனாவுடன் மேலும் உறவுகளை விரிவாக்கிக் கொள்ள தற்போதைய அரசாங்கம், விரும்புகிறது.
ஊழல் மோசடிகளால் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நல்லெண்ணமும், நட்புறவும் பாதிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்.
சீனாவோ சிறிலங்காவோ, ஊழல்காரர்களைப் பாதுகாக்காது. ஊழல் மோசடிக்கு எதிராக இரண்டு நாடுகளும், கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.