போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு தயங்காது – இராஜதந்திரிகளுக்கு மைத்திரி உறுதிமொழி
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க தமது அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் பணியாற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேசினார்.
இதன்போதே அவர், போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக நம்பகமான உள்நாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த விசாரணைகளில் மீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் குற்றவாளிகளைத் தண்டிக்க அரசாங்கம் தயக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
எல்லா நாடுகள் மற்றும் அமைப்புகளுடனும் இணக்கமாகப் பணியாற்றுவதே புதிய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்றும், அனைத்ர்துலக அமைப்புகளுடன் புதிய அரசாங்கம் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, சிறிலங்கா அதிபரின் செயலர் பி.பி.அபேகோன், மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.