மனித உரிமைகள் விவகாரம் குறித்து மங்களவுடன் பேசினார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், மனித உரிமைகள், நல்லிணக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தாம் பேச்சுக்களை நடத்தியதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று வொசிங்டனில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, சூசன் ரைஸ் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், தாம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், மனித உரிமைகள், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி தொடர்பாக நல்லதொரு கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 100 நாள் செயற்திட்டத்தின் எஞ்சிய பகுதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்பார்த்திருப்பதாகவும் சூசன் ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
சூசன் ரைஸ், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.