சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறார் தென்னாபிரிக்கத் துணை அதிபர் சிறில் ரமபோசா
தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜொவ் டொட்ஜ் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தென்னாபிரிக்கத் துணை அதிபரின் சிறிலங்கா பயணம் இன்னமும் திட்டமிடல் கட்டத்திலேயே இருப்பதாகவும், அதனால் அவரது சரியான பயண நாள் குறித்து உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக அவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுக்களை நடத்தக் கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், தென்னாபிரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சிறில் ரமபோசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவர் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்திருந்திருந்தார்.
எனினும், அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
அதேவேளை, தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் நோமான்டியா பெகெடோ சிறிலங்காவுக்கு வரும் 24ம் நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் 24ம் நாள் தொடக்கம் 28ம் நாள் வரை நடைபெறவுள்ள சிறிலங்கா – தென்னாபிரிக்க ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தொடரில் பங்கேற்கவே அவர் கொழும்பு வரவுள்ளார்.
இவர் ஏற்கனவே, சிறில் ரமபோசாவுடன் கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.