ஓய்வூதியத்தை இழக்கும் ஆபத்தில் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறிலங்கா நாடாளுமன்றம் ஏப்ரல் 23ம் நாளுக்கு முன்னதாக கலைக்கப்பட்டால், 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகைமையை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்த வாரமே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 23ம் நாளுடனேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
வரும் ஏப்ரல் 23ம் நாளுடன், சிறிலங்கா நாடாளுமன்றம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதாலேயே, அன்றைய நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது எழுந்துள்ள சூழலால், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகைமையை இழக்க நேரிடும்.
நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் இருந்தவர்களுக்கே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தில், முதல்முறையாகத் தெரிவான 69 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
ஏப்ரல் 23ம் நாளுக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், இவர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெறும் தகைமையை இழப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.