மோடியின் பயணத் திட்டத்தில் யாழ், கண்டி, அனுராதபுர நகரங்களும் உள்ளடக்கம்
அடுத்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் செல்லவுள்ளதுடன் கண்டி அல்லது அனுராதபுரவுக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்ட பட்டியலில் யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுர என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கண்டிக்குச் சென்றால், அவர் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லது அவர் அனுராதபுரவுக்குச் சென்று புனித வெள்ளரசு மரத்தை தரிசிக்கலாம்.
எனினும், நரேந்திர மோடி எவ்வளவு நேரம் சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ளார் என்பதைப் பொறுத்தே, அவரது கண்டி, அனுராதபுர பயணத் திட்டங்கள் சாத்தியமா என்பது தீர்மானிக்கப்படும் என்று கொழும்பில் உள்ள இந்திய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்வது பெரும்பாலும் உறுதி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் வடக்கு மாகாணத்தில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் மேற்பார்வை செய்வார் என்றும் கூறப்படுகிறது.