அமைதியான, நம்பகமான தேர்தலை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறார் பான் கீ மூன்
வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தல், அமைதியான முறையிலும், நம்பகமான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இதுதொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கடந்தவாரம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.
இதன்போதே, அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற தனது பலமான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார் பான் கீ மூன்.
ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்காவுக்கு, நல்லிணக்கம், அரசியல் பேச்சு, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு ஐ.நா தொடர்ந்தும் உதவும் என்றும் அவர், பீரிசிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் செயல்முறையில் எந்தவித அச்சமும் இல்லாமல், சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்து மக்களும் வாக்களிப்பில் பங்கேற்பது முக்கியம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.