வடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது – மகிந்த பிடிவாதம்
சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முகநூல் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹன்வெல்லவில் இன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“முகநூல் வழியாக செய்யப்படும் பொய்யான பரப்புரைகளை இளைஞர்கள் நம்பிவிடக் கூடாது.
ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரினால், அதனால் நல்லதா கெட்டதா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.
லிபிய அதிபர் கடாபிக்கு நேர்ந்த கதியே எனக்கும் நேரும் என்று சிலர் கூறுகிறார்கள்.
பொதுமக்களின் ஆதரவு இருக்கும் வரை எவராலும் என்னைத் தோற்கடிக்க முடியாது.
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு தான் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன்.
இப்போது வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்குமாறும், உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்புக்கு அவசியமான உயர்பாதுகாப்பு வலயங்களை வடக்கில் இருந்து அகற்ற இணங்கமாட்டேன்.
அம்பாந்தோட்டையிலும், கொழும்பிலும் கூட உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கும் போது வடக்கில் இருந்து மட்டும் ஏன் அவற்றை அகற்ற வேண்டும்?
தேசிய பாதுகாப்பு விடயத்தில், எந்த விட்டுக் கொடுப்புக்கோ, நாடு பிளவுபடுவதற்கோ அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.