மகிந்தவின் கூடாரத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரசும் வெளியேறியது
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளது.
கொழும்பில் இன்று காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நீதி அமைச்சர் பதவியைத் தாமும், ஏனைய தமது கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திலும் வகித்து வந்த பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், ஐதேகவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்த உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் 17வது திருத்தச்சட்டத்தை மீள நடைமுறைப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே தாம் எதிரணியுடன் இணைந்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த முடிவை எடுப்பதற்கு தாம் தாமதித்ததற்கு, கட்சியை உடையாமல் பாதுகாக்கவே என்றும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இந்த முடிவையடுத்து, நாடாளுமன்றத்தில், ஆளும் கூட்டணியின் பலம் மேலும் 8 ஆசனங்களால் குறைந்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு, மாகாணசபைகளில் 13 ஆசனங்களும், உள்ளூராட்சி சபைகளில் 163 ஆசனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.