இரகசிய உடன்பாட்டு ஆவணம் போலியானது – மங்கள சமரவீர
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக வெளியிடப்பட்ட இரகசிய உடன்பாட்டு ஆவணம், போலியானது என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டின் பிரதி என்று கூறி, ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆவணம் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
அந்த ஆவணம் பொய்யானது என்றும், அத்தநாயக்க காண்பித்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்துகள் போலியானவை என்றும் மங்கள சமரவீர, நேற்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.