எதிரணியின் கிண்டலால் அவசரமாக வெளியாகிறது மகிந்தவின் தேர்தல் அறிக்கை
‘மகிந்த சிந்தனை- முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை இன்று அவசர அவசரமாக வெளியிடப்படவுள்ளது.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்.
முன்னதாக, நேற்று இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த நிகழ்வு திடீரெனக் கைவிடப்பட்டதுடன், எதிர்வரும் 26ம் நாளே வெளியிடப்படும் என்று, அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.
அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தேர்தல் அறிக்கையைக் கூட வெளியிடத் திராணியற்றவராக இருப்பதாக, எதிரணியினர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில், திடீரெனத் தமது முடிவை மாற்றிக் கொண்டு, இன்று காலை தேர்தல் அறிக்கையை வெளியிடத் தீர்மானித்துள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.