அமீர் அலி பதவிவிலக வேண்டும் – பகிரங்கமாக அழுத்தம் கொடுத்த மகிந்த
அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று நடந்த தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“அரசாங்கம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அமீர் அலி அண்மையில் ஏற்றுக் கொண்டிருந்தார்.
கனவானாக நடந்து கொண்டு, அவர் நாடாளுமன்றப் பதவியை விட்டு விலக வேண்டும்.
நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக அமீர் அலி இன்னொரு முஸ்லிமுக்கு துரோகம் செய்து விட்டு, எதிரணியுடன் இணைந்துள்ளார். இவ்வாறானவர்களை நாம் எவ்வாறு நம்ப முடியும்?
அமைச்சர் ரிசாத் பதியுதீன் எதிரணியுடன் இணைந்து கொள்வார் என்று நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்.
சிலர் முஸ்லிம் மக்களின் வாக்குகளை வைத்து என்னுடன் பேரம் பேச முனைகின்றனர். ஆனால் நான் அத்தகைய பேரங்களுக்கு இணங்கத் தயாராக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவதற்காகவே, ஏ.எச்.எம்.அஸ்வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகச் செய்து, நாடாளுமன்ற உறுப்பினராக அமீர் அலியை ஆளும்கட்சி நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.