மைத்திரியை குறிவைத்து கிளைமோர் குண்டுகள் – கொலை முயற்சியில் இருந்து தப்பினார்
நிட்டம்புவவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்காக கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கம்பகா நகரசபை மைதானத்தில் நேற்று மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெறவிருந்தது.
இந்தநிலையில், மாடு மேய்க்கச் சென்றவர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் நிட்டம்புவ மயானம் ஒன்றில், இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை தலா 10 கிலோ எடையுள்ளவை என்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை என்றும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பகாவில் நேற்று நடக்கவிருந்த மைத்திரிபா சிறிசேனவின் கூட்டம், அவரது மாமியாரின் இறுதிக்கிரியைகள் வெலிவேரியவில் நடைபெற்றதால் ஒத்திவைக்கப்பட்டது.
நிட்டம்புவவில் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டதையடுத்து, மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.