மகிந்தவுக்கு சுமந்திரன் பதிலடி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டுவது போன்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு செய்திருப்பதாகவும், இதனை தாம் விரைவாக அம்பலப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக, மக்களைத் தவறாக வழிநடத்த முனைகிறார் சிறிலங்கா அதிபர்.
எந்தவொரு அதிபர் வேட்பாளருடனாவது. உடன்பாடு செய்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்தால், அது பகிரங்கமாகவே இடம்பெறும், ஒளிவுமறைவாக எதையும் செய்யமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.