சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சந்திரிகா கோரிக்கை
நியாயமான, நீதியான தேர்தல் நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“வரும் ஜனவரி 8ம் நாள் நீதியான, நியாயமான முறையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
தேர்தலைக் கண்காணிப்பதில் மட்டும் தான், அனைத்துலக சமூகம் நேரடியாக பங்களிக்க முடியும். ஆனால் அந்த செயல்முறையை சிறிலங்கா அரசாங்கம் குழப்பும் என் நினைக்கிறேன்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அடுத்தமாத துவக்கத்தில் அனைத்துலக இராஜதந்திரிகளைச் சந்திப்பார்.
மைத்திரிபாலவின் தேர்தல் பரப்புரைகள் நன்றாகவே சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், தேர்தல் நாளுக்கு முன்னதாக எல்லாவற்றையும் செய்வதற்கு நேரம் பற்றாக்குறையாக உள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு அடிமட்டத்தில் ஆதரவு உள்ளது. அதனை ஒருங்கிணைத்து, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது.
தேர்தல் நாளன்று மோசடிகள் இடம்பெறும் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம், சரத் பொன்சேகாவின் தேர்தலின் போதும் அதுவே நடந்தது.
அரசாங்கத்தின் இத்தகைய மோசடிகளை எதிர்கொள்ள மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் குழு, தேர்தலுக்கு முதல் நாள் பல தந்திரோபாயங்களை செயற்படுத்தவுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.