ஐ.நா அறிக்கை கிலியில் சிறிலங்கா – இப்போதே சட்டவல்லுனர்களைத் தயார்படுத்துகிறது
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையை எதிர்கொள்வது குறித்து உலகிலுள்ள மிகப் பிரபலமான சட்டவல்லுனர்களுடன் சிறிலங்கா தொடர்பு கொண்டுள்ளது.
இந்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மிகவும் சிக்கலான இந்த அறிக்கையின் விளைவுகளை எதிர்கொள்வது குறித்தே, சிறிலங்கா அரசாங்கம் உலகில் பிரபலமான சட்டவல்லுனர்களின் உதவியை நாடியிருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் அழுத்தங்களை எதிர்கொள்வது குறித்து பல்வேறு மட்டங்களிலும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“உலகின் மிகச் சிறந்த சட்டவாளர்களுடன் நாம் தொடர்பு கொண்டுள்ளோம்.
சட்டமூலோபாய ரீதியான தயார்படுத்தல்களை மேற்கொள்வது தொடர்பாகஅவர்கள் எம்முடன் இணைந்திருக்கின்றனர்.
ஆனால், இது முக்கியமானதொரு அரசியல் விவகாரம்.
எனவே, நாம் நட்பு நாடுகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.