ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களுக்குத் தடைபோட்ட வேட்பாளர்கள்
அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நால்வர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துலக கண்காணிப்பாளர்களை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும், சிறிலங்கா அங்கம் வகிக்கும் அமைப்புகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களை மட்டுமே அழைக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
எனினும் தேர்தலிலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்தால் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடும், நான்கு வேட்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
நான்கு வேட்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால், தம்மால் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கொமன்வெல்த், சார்க் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு இந்த தேர்தலை கண்காணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இந்த தேர்தலை கண்காணிக்க சிறிலங்கா வரவுள்ளனர்.