மனித உரிமைகள் கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
லண்டனைத் தளமாக கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரும் பரவலான மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர, அனைத்து அதிபர் வேட்பாளர்களும் உறுதிபூண வேண்டும்.
இத்தகைய மீறல்களுக்கு வசதி செய்யும், தண்டனையில் இருந்து விலக்களிக்கப்படும் நிலையை முடிவுக்கு கொண்டு வரவும்,
துஸ்பிரயோகங்கள், இன, மத ரீதியான மோதல், பால்நிலை அடிப்படையிலான பாகுபாடுகள், வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அதிபர் வேட்பாளர்கள் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
சிறிலங்காவில் அனைத்து மட்டங்களிலும் உள்ள தண்டனையில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியது மிக முக்கியமானது.
அத்துடன், அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.