கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்
சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரகாலம் தங்கிச் சென்ற பின்னர், முதல்முறையாக இந்தியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல், நான்கு நாள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்தனர்.
‘ஐஎன்எஸ் சுகன்யா’ என்ற இந்தப் போர்க்கப்பலுக்கு கொழும்புத் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் பெரியளவிலான வரவேற்பு அளித்துள்ளனர்.
விநியோகத் தேவைகளுக்காகவே இந்தப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.
இந்தியக் கடற்படையின் ஆழ்ந்கடல் ரோந்துக் கப்பலான ‘சுகன்யா’, 101 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இதில் 165 கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.
மாலைதீவில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, நீர் சுத்திகரிப்பு வசதிகளைக் கொண்ட ‘சுகன்யா’ போர்க்கப்பல் கடந்த வாரம் மாலே சென்றிருந்தது. அங்கிருந்து, இது கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரகாலம் தங்கிச் சென்ற பின்னர், முதல்முறையாக இந்தியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சீன நீர்மூழ்கியின் கொழும்பு பயணத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அது விநியோகத் தேவைகளுக்காகவே கொழும்பு வந்ததாக சிறிலங்கா கடற்படை கூறியிருந்தது.
இந்தியப் போர்க்கப்பலின் வருகைக்கும் சிறிலங்கா கடற்படை தற்போது அதே காரணத்தைக் கூறியுள்ளது.