சிறிலங்காவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு அனைத்துலக சமூகமே காரணம் – ஐ.நா நிபுணர்
போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடியை தீர்க்க அனைத்துலக சமூகம் குறிப்பாக, சிறிலங்காவின் அயல் நாடுகள் தவறிவிட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர் அடமா டையிங்.
நியுயோர்க்கில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த தோல்வியின் விளைவாக, அனைத்துலக சமூகத்தின் கண்களுக்கு முன்பாகவே, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
போரின் போது நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவொன்றை அமைத்து, ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் வலுவான தார்மீக பலத்தை வெளிப்படுத்தினார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய நாடுகளில் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த மனித உரிமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஏதேனும் நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளுக்கு முதல் நிலையாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பாரிய அடக்குமுறைகளை சந்திக்கும் மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக, ஐ.நா உறுப்பு நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
எமது அனுபவத்தின்படி, இனப்படுகொலை என்பது உடனடியாக நடைபெறக் கூடிய நிகழ்வு அல்ல. அதற்கான செயல்முறைகளை நடைமுறைப்படுத்த காலம், திட்டமிடல், வளங்கள் தேவைப்படும்.
எனவே அது தொடர்பாக உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இனப்படுகொலைகளைத் எந்தக் கட்டத்திலும் தடுக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.