திருப்பதி புறப்பட்டார் மகிந்த – கோவையில் கொடும்பாவி எரித்து போராட்டம்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக இன்று மாலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் நாளை கொழும்பு திரும்புவார் என்று குறிப்பிட்ட மொகான் சமரநாயக்க மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவே இன்று மாலை இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவரது பயணத்தை முன்னிட்டு, திருப்பதியிலும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருப்பதி சென்று திரும்பும் வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா அதிபரின் திருப்பதி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோயம்புத்தூரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து. கொடும்பாவி எரித்த 8 பேர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.