ஹெல உறுமயவுக்குள் பிளவு – ஒரு பகுதி மகிந்தவுக்கு ஆதரவு
ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு பகுதி பௌத்த பிக்குகள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு செய்து கொண்டு அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க, தலைவர் அத்துரலியே ரத்தன தேரர், உதய கம்மன்பில, நிசாந்த சிறீவர்ணசிங்க ஆகியோர், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஜாதிக ஹெல உறுமயவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு அமைப்பான ஹெற்ற ரட்டக், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
இந்தக் குழுவில் எல்லாவெல மேதானந்த தேரர் உள்ளிட்ட பிக்குகள் இடம்பெற்றுள்ளனர்.
ஹெற்ற ரட்டக் அமைப்பின் செயலர் வண.டெனகம தம்மாராம தேரர் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், தாம் பெரும்பாலான ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்களின் கருத்தை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.
“மைத்திரிபால சிறிசேனவுடன் செய்துள்ள உடன்பாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், சமஸ்டி அரசமைக்க முனையும் சந்திரிகா குமாரதுங்கவுடனும் ஐதேகவுடனும் இணைந்து பணியாற்ற இணங்கியுள்ளது, சிங்கள பௌத்த கட்சி என்ற ஜாதிக ஹெல உறுமயவின் அடையாளங்களுக்கு முற்றிலும் வேறுபாடானது.
நாள் சிங்கள பௌத்த எழுச்சியை ஏற்படுத்துபவர்கள்.பெரும்பாலான ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் எம்முடன் உள்ளனர்.
ஜேவிபி ஒதுங்கி நிற்கிறது. சமஸ்டிவாதிகள், தாராண்மைவாதிகள், தேசியவாதிகள் எதிரணியில் உள்ளனர்.
முரண்பாடுகளைக் கொண்டவர்களின் கூட்டணி அது. புதிய ஜனநாயக முன்னணியை நம்பமுடியாது.
அவர்களுடன் இணைந்து கொள்வது சரியானதல்ல” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.