சிறிலங்கா கண்ணிவெடி வயல்களில் இப்போது ஆரம்ப பாடசாலைகள் – ஜோன் கெரி
சிறிலங்காவில் கண்ணிவெடி வயல்களில் இப்போது ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிக்க முடிந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பூகோள பாதுகாப்பு நாள் நிகழ்வில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“கண்ணிவெடிகளைத் தடை செய்யும் உடன்பாட்டில் அமெரிக்கா கையெழுத்திடாத போதிலும், கண்ணிவெடிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் நாம் முக்கிய பங்காற்றியிருக்கிறோம் என்று நிச்சயம் பெருமைப்பட முடியும்.
1993ம் ஆண்டில் இருந்து, கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் நாம் முன்னணிப் பங்காற்றியிருக்கிறோம்.
90இற்கும் மேற்பட்ட நாடுகளில், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 2.3 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளோம்.
வியட்னாமில் கடற்படை அதிகாரியாக இருந்த போது, கண்ணிவெடிகளால் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டன என்பது எனக்குத் தெரியும்.
கண்ணிவெடிகள் இப்போது பாரிய மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ளது.
படையினர் ஆயுதங்களைக் கீழே வைத்த பின்னரும், தலைவர்கள் சமாதானமான பின்னரும், பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், அப்பாவி, ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் அதனால் பாதிக்கப்படுகின்றனர்.
உலகில் அமெரிக்காவின் முயற்சியால், 15 நாடுகள் இப்போது கண்ணிவெடிகளற்ற பகுதி என்று பிரகடனம் செய்துள்ளன.
சிறிலங்காவில் கண்ணிவெடிகளை போர் நடந்த பகுதிகளில் அகற்ற நாம் உதவியுள்ளோம்.
அங்கு இப்போது ஆரம்ப பாடசாலைகளை அமைத்துக் கொள்ள முடியும்.
அங்கோலாவின் கிராமப் புறங்களில் இப்போது ஆபத்தான கொலைக்களங்களில் இருந்து மீண்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.