தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக அமைப்புகளுக்கு அழைப்பு
அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக கண்காணிப்புக் குழுக்களுக்கு சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆசிய தேர்தல் அதிகாரிகளின் கூட்டமைப்பு, கொமன்வெல்த் கூட்டமைப்பு, தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவற்றுக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கலந்தாலோசனை செய்த பின்னரே சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் ஏனைய அனைத்துலக கண்காணிப்பாளர்களை அழைப்பது குறித்து முடிவு செய்வார் என்று தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு சட்டரீதியான அதிகாரம் கிடையாது.
இந்த அமைப்புகளில் சிறிலங்காவும் ஒரு தரப்பாக உள்ளது.
எனவே, இந்த மூன்று அமைப்புகளுக்கும் கண்காணிப்பில் ஈடுபட அழைக்க முடியும்.
ஏனைய கண்காணிப்பு அமைப்புகளை அழைப்பது குறித்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்க முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.