மேலும்

அமைச்சரவை மாற்றம், வரவுசெலவுத் திட்டம்: பரபரப்பான சூழலில் கூடுகிறது வடக்கு மாகாணசபை

northern-provincial-councilஅடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலும் – அமைச்சரவைப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பேசப்படுகின்ற நிலையிலும் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது.

இன்றைய அமர்வின் போது, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதிஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான, குறைநிரப்பு பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் சமர்ப்பிப்பார் என்று, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும், அடுத்தவாரம் அது சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, வடக்கு மாகாணசபையின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், வடக்கு மாகாணசபையில் நான்கு அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர்.

விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சராக பொ.ஐங்கரநேசன், கல்வி விளையாட்டுத்துறை அமைச்சராக த.குருகுலராஜா, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராமிய, போக்குவரத்து அமைச்சராக பா.டெனீஸ்வரன், சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் ஆகியோர் வடக்கு மாகாணசபை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடமும் அதிகளவு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளன.

இந்த அமைச்சுப் பொறுப்புகளிலேயே மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும், இதுக்குறித்து, அமைச்சரவை மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *